உள்ளக்கிடக்கைகள்...!!!

Thursday, November 19, 2009

யாருடைய தவறு?

நேற்று முன் தினம் என் குழந்தை அதீதமான காய்ச்சலால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தாள். உடனடியாக நானும் என் மனைவியும் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லலாம் என்று சென்னை, கே கே நகரில் உள்ள கே எம்  மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு வரவேற்பு (???) மேசையில் இருந்த பெண்கள் "மருத்துவரை பார்ப்பதற்கு முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இப்போது 40 பேர் காத்திருக்கிறார்கள். 7 மணிக்கு வரவேண்டிய மருத்துவர் 8:30 மணிக்குதான் வந்தார். உங்கள் குழந்தையை பார்ப்பதற்கு இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிடும். அதனால் நாளை வாருங்கள்" என்றனர்.

எனக்கு தெரிந்து இந்த மருத்துவமனையில் முன் அனுமதி என்ற ஒரு முறையே நடைமுறையில் இருந்ததில்லை. ஒவ்வொரு முறை நாங்கள் தொலைபேசியில் அழைக்கும்போது அவர்கள் சொல்லும் பதில் "முன் அனுமதி என்றெல்லாம் எதுவும் இல்லை. மருத்துவர் மாலை 7 மணிக்கு வருவார். அப்போது நீங்கள் நேரடியாக வந்துவிடுங்கள். மருத்துவரை சந்திக்கலாம்." என்பதே.

இதை நான் அவர்களிடம் சொன்னவுடன் அவர்களுக்கு வந்ததே கோபம், "நாங்கள் இந்த மருத்துவமனையில் 3 வருடங்களாக பணியாற்றிக்கொண்டிருக்கிரோம். எங்களுக்கு தெரியாதா? நீங்கள் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இன்று மருத்துவர் உங்கள் குழந்தையை பார்க்க மாட்டார்.

நான் கூறினேன் "அம்மா, என் குழந்தைக்கு அதிகமாக காய்ச்சல் அடிக்கிறது. அதனால் நாங்கள் இருந்து பார்த்துவிட்டு போகிறோம், எத்துனை நேரமானாலும் பராயில்லை" என்று. நம்முடைய வரவேற்பாளினி கறாராக சொல்லிவிட்டார் "நாளைதான் பார்க்க முடியும்". ஏனென்றால் இவர்களுடைய வேலை திறனை நான் குறைத்து மதிப்பிட்டுவிட்டேன் அல்லவே? இத்தோடு நிற்கவில்லை அந்த பெண்மணி. "எல்லோருக்கும்தான் காய்ச்சல் அடிக்கிறது, அதற்கு என்ன செய்ய முடியும்?" என்றார்.

எனக்கும் கோபம் வந்தது. ஆனால் யார் மேல் கோபப்படுவது. இந்த வரவேற்பு மேசையில் உட்கார்ந்திருக்கும் பெண்கள் மீதா அல்லது பல மருத்துவமனைகளில் பணியாற்றிவிட்டு மேலும் சில காசுகளை பார்க்கலாம் என்று மிகவும் தாமதமாக வரும் இந்த மருத்துவர் மீதா? மேலும் இந்த மருத்துவர் 8:30 மணிக்கு வந்ததற்கு நானோ, என் குழந்தையோ பொறுப்பேற்க முடியுமா?

அய்யா, நீங்கள் குணப்படுத்துவது பெரியவர்களை அல்ல. பச்சிளம் குழந்தைகளை. கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத நீங்கள் ஏன் மருத்துவர் தொழில் செய்கிறீர்கள்?

நீங்கள் மருத்துவம் பார்க்க வேண்டாம். மனிதாபிமானமும் உங்களுக்கு வேண்டாம். உங்கள் வரவேர்பாளினிகளுக்கு கொஞ்சம் மருத்துவமனைக்கு வருபவர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று கற்றுக்கொடுங்கள். உங்களுடைய வேலையை நான் குறை சொல்லவில்லை. இரவு 12 மணி வரை உழைக்கிறீர்கள். இந்த மழைக்காலத்தில் நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். அது உங்களுடைய தொழிலுக்கே உரிய பண்பு. ஆனால் அதற்காக சேவையை மறுக்காதீர்கள்.

இந்த ஒரு சம்பவம் மட்டுமில்லை. என் நண்பர் ஒருவரும் இந்த மருத்துவமனையின் வரவேற்கும் பெண்களின் நளினமான அணுகுமுறையைப்பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார். அதனால்தான் இங்கு நான் குமுறிக்கொண்டிருக்கிரேன்.

Tuesday, November 3, 2009

அப்போலோ மருத்துவமனையும் அன்றாடங்காய்ச்சிகளும்...!!!

இன்றைய தினம் அப்போலோ மருத்துவமனையின் சேவையை பாராட்டி இந்திய அரசு ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. பார்க்க . மிக்க மகிழ்ச்சி. ஆனால் எத்துனை ஏழைகள் இவர்களால் குணப்படுதப்பட்டிருப்பார்கள்?

சில நாட்களுக்கு முன்னாள் ஒரு செய்தி வந்திருந்தது. பார்க்க . டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு அப்போலோ மருத்துவமானைக்கு எதிராக தொடரப்பட்டிருந்தது. டெல்லி மாநகராட்சி அப்போலோ மருத்துவமனைக்கு 15 ஏக்கர் நிலம் ஒரு ரூபாய்க்கு (வெறும் ஒரே ஒரு ரூபாய்க்கு) வழங்கியது. அத்தோடு நில்லாமல் அந்த மருத்துவமனையை கட்டுவதற்கு 16 கோடி ரூபாயை அளித்தது, ஒரு ஒப்பந்தத்துடன்.

அந்த ஒப்பந்தத்தின்படி அப்போலோ மருத்துவமனையானது, வெளி நோயாளிகள் பிரிவில் 40 சதவிகிதத்தினருக்கும் உள் நோயாளிகள் பிரிவில் 33 சதவிகிதத்தினருக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த சிகிச்சை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் (மருந்து மாத்திரைகள் முதல் தங்குமிடம் வரை).

ஆனால் நம்முடைய சேவை மனப்பான்மை மிக்க அப்போலோ மருத்துவமனை இப்படி ஒரு வசதி இருக்கிறது என்ற எண்ணமே ஏழைகளுக்கு ஏற்படாத வகையில் நடந்து கொண்டிருந்திருக்கிறது.

அட இதையெல்லாமா எதிர்பார்ப்பது, சேவைக்கு பெயர் போன ஒரு மருத்துவமனையிடமிருந்து?

இப்படி காசு வாங்காமல் சிகிச்சை செய்தால் அவர்கள் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் எப்படி சம்பளம் கொடுப்பார்களாம்?

இதுகூட பரவாயில்லை. பன்றி காய்ச்சல் நாட்டையே உளுக்கிக்கொண்டிருந்த நேரம். இந்திய சுகாதாரத்துறை அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. அதற்கு இவர்கள் சொன்ன பதில் "நாங்கள் பன்றி காய்ச்சல் வந்த நோயாளிகளை அனுமதித்தால் ஏற்கெனவே உள்ளே இருக்கும் நோயாளிகளுக்கு அந்த நோய் வந்துவிட வாய்ப்புண்டு". இதன் உண்மையான பொருள் "நாங்கள் பன்றி காய்ச்சல் வந்த நோயாளிகளை அனுமதித்தால், ஏற்கெனவே உள்ளே இருக்கும் (பணக்கார) நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு சென்றுவிடுவார்கள் மற்றும் புதிய நோயாளிகள் எவரும் எங்கள் மருத்துவமனைக்கு வரமாட்டார்கள்". பார்க்க

அப்போலோ போன்ற ஒரு பெரிய மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளை உருவாக்க எவ்வளவு நாட்கள் ஆகும்?

ஆகையினால் மக்களே, அப்போலோ மருத்துவமனைக்கு இந்த பாராட்டும், சிறப்பும் எப்பொழுதோ கிடைத்திருக்க வேண்டியது. ஏனோ, தாமதப்படுதிவிட்டர்கள்.

இனிமேலாவது இவர்கள் ஏழைகளுக்கு சேவை செய்ய முன்வந்தால் இந்த பாராட்டுகளுக்கு ஒரு மதிப்பு இருக்கும்.

Thursday, September 24, 2009

அடுக்கு மாடி குடியிருப்பும், தனி வீடும்...!!!

இன்று என்னுடைய நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு வீடு கட்டும் திட்டத்துடன் மனைகளை தேடிக்கொண்டிருக்கிறார். நானோ ஒரு அடுக்கு மாடி குடியிருப்பாளன். உரையாடலின் இடையே அடுக்கு மாடி வீடு விரும்பத்தக்கதா அல்லது தனி வீடு நன்றா என்று சிறு வாக்குவாதம்.

நண்பரின் கருத்தின்படி,
- அடுக்கு மாடி குடியிருப்பின் மதிப்பு குறைந்துகொண்டே இருக்கும்.
- அந்த கட்டிடத்தின் வாழ்நாள் முடிந்தபின் நம்மிடம் இருப்பது அந்த பிரிக்க முடியாத நிலத்தின் உரிமை மட்டுமே.
- எப்படியும் அந்த பிரிக்க முடியாத நிலத்தின் அளவு மிகவும் குறைவு, எனவே அதை விற்கும் விலையும் அறுதியானதே.
- நம்முடைய தனிப்பட்ட அன்னியோன்யமான ஒரு இடமாக அது இருக்காது.
- என்ன செய்ய வேண்டுமென்றாலும் குடியிருப்போர் நலச்சங்கத்தின் அனுமதி வேண்டும்.
- எனவே அடுக்கு மாடி குடியிருப்பை தேர்வு செய்வது ஒரு புத்திசாலிதனமான முடிவு அல்ல என்பதே.

இதற்கு என்னுடைய எதிர் கருத்துக்கள்,
- முதலில் என்னிடம் ஒரு தனி வீடு வாங்குவதற்கான பொருளாதாரம் இல்லை.
- என்னுடைய வீடு நகரத்தின் மிக முக்கியமான பகுதியில் உள்ளது. இந்த இடத்தில் நான் தனி வீடு வாங்குவது கனவில் வேண்டுமானால் நடக்கலாம். (நம் நண்பர் வீடு தேடிக்கொண்டிருப்பது நகரத்திற்கு வெளியே. ஆனால் அவருடைய வாதம், இன்னும் சில வருடங்களில் அப்பகுதியும் நகரமாகிவிடும்)
- நானும் என் மனைவியும் பணிக்கு செல்பவர்கள். காலை வேளைகளில் வீட்டில் யாரும் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. என்னுடைய அடுக்கு மாடி குடியிருப்பை பூட்டிவிட்டு தைரியமாக வெளியே செல்ல முடியும் (காவலர்கள் உண்டு).
- எங்கள் குடியிருப்பில் நீச்சல் குளம் உண்டு. உடற்பயிற்சி செய்வதற்கான அத்துனை வசதிகளும் உண்டு (உடற்பயிற்சி கருவிகள் உட்பட). பூப்பந்து விளையாட திடல் உண்டு. சிறுவர்கள் விளையாடும் இடம் உண்டு. வீட்டு விழாக்கள் நடத்துவதற்கு தனி சமுதாயக்கூடம் உண்டு (ஒரு நாள் வாடகை ரூ. 500 மட்டுமே).
- இத்துனையும் நான் என்னுடைய தனி வீட்டில் ஏற்பாடு செய்ய முடியுமா. அதற்கு கட்டாயம் நான் ஒரு கொடிகளின் கோமானாக இருக்க வேண்டும்.


அதற்காக நான் தனி வீடு வேண்டமேன்றோ, தனி வீடு கட்டுவதென்பது புத்திசாலிதனமில்லை என்றோ சொல்லவில்லை. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சில விருப்பங்கள், முக்கியத்துவங்கள் இருக்கின்றன. அவற்றின்படி அவரவர் முடிவெடுத்துக்கொள்ள வேண்டியதே.

Thursday, September 17, 2009

வணக்கம் தோழா...!!!

என்னுடைய பெயர் மதுசூதனன் சீத்தாரம். நான் ஒரு கணிப்பொறியாளன். என்னுடைய வலைப்பதிவில் பிழைகள் இருந்தால் அவை வேண்டுமென்றே செய்யப்பட்டவை அல்ல. என்னுடைய அன்றாட வாழ்க்கையில் நான் சந்திக்கும் மனிதர்களைப் பற்றியும் கேட்ட, பார்த்த, படித்த செய்திதாளைப் பற்றியும் இங்கு நான் உரக்க எழுதலாமென்று இருக்கிறேன். என்னுடைய கருத்துக்கள் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை. அவ்வாறு என்னுடைய கருத்துக்கள் உங்களை புண்படுத்துவதாக இருந்தாலோ அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தாலோ எனக்கு உடனே தெரியப்படுத்தினால் மிகவும் மகிழ்வேன். அவற்றை திருத்திக்கொள்ளவும் தயங்க மாட்டேன்.