நேற்று முன் தினம் என் குழந்தை அதீதமான காய்ச்சலால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தாள். உடனடியாக நானும் என் மனைவியும் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லலாம் என்று சென்னை, கே கே நகரில் உள்ள கே எம் மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு வரவேற்பு (???) மேசையில் இருந்த பெண்கள் "மருத்துவரை பார்ப்பதற்கு முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இப்போது 40 பேர் காத்திருக்கிறார்கள். 7 மணிக்கு வரவேண்டிய மருத்துவர் 8:30 மணிக்குதான் வந்தார். உங்கள் குழந்தையை பார்ப்பதற்கு இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிடும். அதனால் நாளை வாருங்கள்" என்றனர்.
எனக்கு தெரிந்து இந்த மருத்துவமனையில் முன் அனுமதி என்ற ஒரு முறையே நடைமுறையில் இருந்ததில்லை. ஒவ்வொரு முறை நாங்கள் தொலைபேசியில் அழைக்கும்போது அவர்கள் சொல்லும் பதில் "முன் அனுமதி என்றெல்லாம் எதுவும் இல்லை. மருத்துவர் மாலை 7 மணிக்கு வருவார். அப்போது நீங்கள் நேரடியாக வந்துவிடுங்கள். மருத்துவரை சந்திக்கலாம்." என்பதே.
இதை நான் அவர்களிடம் சொன்னவுடன் அவர்களுக்கு வந்ததே கோபம், "நாங்கள் இந்த மருத்துவமனையில் 3 வருடங்களாக பணியாற்றிக்கொண்டிருக்கிரோம். எங்களுக்கு தெரியாதா? நீங்கள் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இன்று மருத்துவர் உங்கள் குழந்தையை பார்க்க மாட்டார்.
நான் கூறினேன் "அம்மா, என் குழந்தைக்கு அதிகமாக காய்ச்சல் அடிக்கிறது. அதனால் நாங்கள் இருந்து பார்த்துவிட்டு போகிறோம், எத்துனை நேரமானாலும் பராயில்லை" என்று. நம்முடைய வரவேற்பாளினி கறாராக சொல்லிவிட்டார் "நாளைதான் பார்க்க முடியும்". ஏனென்றால் இவர்களுடைய வேலை திறனை நான் குறைத்து மதிப்பிட்டுவிட்டேன் அல்லவே? இத்தோடு நிற்கவில்லை அந்த பெண்மணி. "எல்லோருக்கும்தான் காய்ச்சல் அடிக்கிறது, அதற்கு என்ன செய்ய முடியும்?" என்றார்.
எனக்கும் கோபம் வந்தது. ஆனால் யார் மேல் கோபப்படுவது. இந்த வரவேற்பு மேசையில் உட்கார்ந்திருக்கும் பெண்கள் மீதா அல்லது பல மருத்துவமனைகளில் பணியாற்றிவிட்டு மேலும் சில காசுகளை பார்க்கலாம் என்று மிகவும் தாமதமாக வரும் இந்த மருத்துவர் மீதா? மேலும் இந்த மருத்துவர் 8:30 மணிக்கு வந்ததற்கு நானோ, என் குழந்தையோ பொறுப்பேற்க முடியுமா?
அய்யா, நீங்கள் குணப்படுத்துவது பெரியவர்களை அல்ல. பச்சிளம் குழந்தைகளை. கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத நீங்கள் ஏன் மருத்துவர் தொழில் செய்கிறீர்கள்?
நீங்கள் மருத்துவம் பார்க்க வேண்டாம். மனிதாபிமானமும் உங்களுக்கு வேண்டாம். உங்கள் வரவேர்பாளினிகளுக்கு கொஞ்சம் மருத்துவமனைக்கு வருபவர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று கற்றுக்கொடுங்கள். உங்களுடைய வேலையை நான் குறை சொல்லவில்லை. இரவு 12 மணி வரை உழைக்கிறீர்கள். இந்த மழைக்காலத்தில் நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். அது உங்களுடைய தொழிலுக்கே உரிய பண்பு. ஆனால் அதற்காக சேவையை மறுக்காதீர்கள்.
இந்த ஒரு சம்பவம் மட்டுமில்லை. என் நண்பர் ஒருவரும் இந்த மருத்துவமனையின் வரவேற்கும் பெண்களின் நளினமான அணுகுமுறையைப்பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார். அதனால்தான் இங்கு நான் குமுறிக்கொண்டிருக்கிரேன்.
உள்ளக்கிடக்கைகள்...!!!